search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரியில் கடல் சீற்றம்"

    குமரியில் இன்று கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் வங்க கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் ஆகிய முக்கடல் சந்திக்கும் திரிவேணி சங்கம பகுதி உள்ளது. அந்த பகுதியில் இன்று கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் முன்பு காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.வழக்கமாக 7.45 மணிக்கு பூம்புகார் படகு போக்குவரத்தில் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும். 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும்.

    இன்று கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் படகு போக்குவரத்து நுழைவு வாயில் தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்து நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    கடலில் 10 முதல் 15 அடி வரை அலைகள் எழுந்தது. பாறையில் பயங்கர சத்தத்துடன் அலைகள் மோதின. இதனால் சுற்றுலா பயணிகளை கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் சுற்றுலா போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கடல் பகுதியில் நிற்கும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து கரையோர பகுதிக்கு அனுப்பி வைத்தனர். 
    கடல் சீற்றமாக கோவளம், ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் குறைந்த அளவு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 

    இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு கடல் சீற்றம் சற்று குறைந்தது. இதையடுத்து 1 1/2 மணி நேரம் தாமதமாக பூம்புகார் படகு போக்குவரத்து துறையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு படகுகள் செல்ல தொடங்கியது. திருவள்ளுவர் சிலைக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.
    குமரி மாவட்டத்தில் பயங்கர கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்றும் இதே நிலை நீடித்தது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர கடல் சீற்றம் காணப்படுகிறது.

    இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் கடல் அரிப்பும் ஏற்பட்டது.

    மேல் மிடாலம் பகுதியில் அலை தடுப்பு சுவர்கள் இல்லாததால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டது. எனவே இங்கு உடனடியாக அலை தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை மீனவர்கள் வள்ளம், கட்டுமரங்கள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு பிற்பகலுக்குள் கரை திரும்பிவிடுவார்கள்.

    ஆனால் கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்றும் இதே நிலை நீடித்தது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் மீன்களின் வரத்து குறைந்தது. இதனால் மீன் மார்க்கெட்டுகள் வெறிச் சோடியது. வியாபாரிகளும் மீன்கள் வாங்கி செல்ல வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கன்னியாகுமரியில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டியது. இதனால் கரையில் இருந்த மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர். மேல் மிடாலம் பகுதியிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களின் மீன் பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரியில் கடற்கரையில் சுற்றுலா போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அவர்கள் கடலில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர்.

    கடல் சீற்றம், மற்றும் அலைகளின் கொந்தளிப்பை கூறி யாரும் கடலில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். இதனால் கடலில் குளிக்கும் ஆசையுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. இதில் 3 பேரின் வீடுகள் பலத்த சேதம் அடைந்தது.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே தென் தமிழக கடல் பகுதியில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும் கடல் தகவல் சேவை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன்காரணமாக குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் 15-ந் தேதி நள்ளிரவு வரை 10 முதல் 14 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பும் வாய்ப்பு உள்ளது. மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் இது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது.

    இதன் காரணமாக குமரி மேற்கு மாவட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த சூறைக்காற்று வீசியது. அதோடு அலைகளின் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் பயங்கரமாக இருந்தது. ராமன்துறை, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை, முள்ளூர்துறை, இரயுமன்துறை பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணாக தூண்டில் வளைவுகள் சேதம் அடைந்தது.

    இதனால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீடுகள், சாலைகள் சேதம் அடைந்தது.

    மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றம் நேற்று கடியப்பட்டினம் கடற்கரை கிராமத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள அந்தோணியார் தெருவில் சிலுவைதாசன், பெர்க்மான்ஸ், பத்ரோஸ், கார்மல், அல்லேஸ், மரியசபினாஸ், அந்தோணி, அருமைநாயகம், சூசைநாயகம், ஜேசையா, ஜான், பிரடின் ஆகியோரின் வீடுகள் சேதம் அடைந்தது.

    இதில் 3 பேரின் வீடுகள் பலத்த சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இன்னும் பலர் வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்றனர்.

    கன்னியாகுமரியில் இன்று காலை கடல் நீர் மட்டத்தில் தாழ்வு ஏற்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை காலை 7.45 மணிக்கு தொடங்கவில்லை.

    இதனால் படகில் சவாரி செய்ய காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கடல் நீர் மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை தொடங்கியது.

    கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் சூரியோதயம் பார்க்க அதிகாலையில் சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். இன்று காலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரியோதயம் காண காத்திருந்தனர்.

    ஆனால் இன்று கன்னியாகுமரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியோதயத்தை பார்க்க முடியவில்லை.

    இதுபோல திரிவேணி சங்கமத்துறையில் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடுவது வழக்கம். இன்று அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடற்கரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சுற்றுலா போலீசார் பயணிகள் யாரையும் கடலில் குளிக்க அனுமதிக்கவில்லை.

    அவர்கள் அனைவரும் கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.



    ×